தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (19.08.2026) மாலை நடைபெற்றது.



திமுக தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்த அனைவருக்கும் கீதாஜீவன் கட்சி சால்வை அணிவித்து வரவேற்றார்.



தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கீதாஜீவன், “திமுக எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைந்துள்ள அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.
வரும் காலங்களில் திமுகவின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்வோம். தளபதி மு.க.ஸ்டாலினை மீண்டும் தமிழக முதல்வராக அரியணையில் அமர்த்த அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்” என்றார்.



நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.