தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்த நிலையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் மீது தொகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பிரதான குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது குடிநீர் விநியோகம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில் அமைச்சர் ஸ்ரீநாத் இந்த குடிநீர் பிரச்சனை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனை நடத்தி, பிரச்சனையை ஆய்வு செய்தாரா? என தொகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் கிடைக்கும் முக்கிய நீராதாரமான வல்லநாடு ஆற்றுப்படுகையில் தற்போது போதிய நீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்யாதது ஏன் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மாநகராட்சி முழுவதும் இடம்பெற்றுள்ள நிலையில், தொகுதி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சனைக்கே முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டு சுமார் 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் மற்றும் நீண்டகால பிரச்சினைகளில் அமைச்சர் ஸ்ரீநாத் போதிய கவனம் செலுத்தவில்லை என பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக குடிநீர் போன்ற அத்தியாவசிய பிரச்சனையில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தூத்துக்குடி தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் இனியாவது அமைச்சர் ஸ்ரீநாத் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா? அல்லது குடிநீர் உள்ளிட்ட பிரச்சினை களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக் கைகளையே மக்கள் தொடர்ந்து எதிர்பார்க்க வேண்டுமா? என்ற கேள்வி தொகுதி மக்களிடையே எழுந்துள்ளது.