தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக கூறப்படும் தனியார் மதுபான பார் ஊழியரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 15 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி அன்னை தெரசா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த சுரேந்திரன் மகன் ராதாகிருஷ்ணன் (37) என்பவர் தனியார் மதுபான பாரில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 31.07.2026 அன்று காலை, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் டி.குமாரவேல் தலைமையிலான போலீசார் மதுவிலக்கு தொடர்பாக ரோந்து சென்றனர். அப்போது, மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் அருகே வெள்ளை நிற சாக்குப் பையுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ராதாகிருஷ்ணனை பிடித்து விசாரித்தனர்.

அவரிடம் இருந்த சாக்குப் பையை சோதனை செய்தபோது, மூடி திறக்கப்படாத நிலையில் பல்வேறு வகையான பிராண்டி பாட்டில்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவற்றில் Old Napoleon VSOP Deluxe Brandy 9 பாட்டில்கள், 1848 Premium XO Brandy 2 பாட்டில்கள், LA MARTINE VSOP Premium Brandy 2 பாட்டில்கள், King Louis XIV XO French Brandy 2 பாட்டில்கள் என மொத்தம் 15 மதுபான பாட்டில்கள் இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையில் இருந்து மதுபான பாட்டில்களை வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக அவற்றை வைத்திருந்ததாக ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், ராதாகிருஷ்ணனை கைது செய்து TNP (Amendment) Act 2024-ன் பிரிவு 4(1)(C) கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மதுபானக் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே தனது குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்பனை செய்து வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மதுவிலக்கு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.