தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு வழக்கில், 5.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, சம்பந்தப் பட்டவர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்த போலீசாருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு பாராட்டு தெரிவித்தார்.



இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய போதைப்பொருள் தடுப்புப் படை காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா, தலைமைக் காவலர்கள் கார்த்திக், ஜோசப், காவலர்கள் விசு, தினேஷ்குமார் மற்றும் போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலர் ஆகியோரை திருநெல்வேலி சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, அவர்களின் பணியைப் பாராட்டினார்.



மேலும், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி திருநாவுக்கரசு கௌரவித்தார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.