தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை ஆணையர் முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் மேயர் பேசும்போது இந்த கூட்டத்தின் நோக்கம் தங்களுக்கு நன்றாகவே தெரியும். கடந்த பத்து மாதங்களாக மண்டல கூட்டம் சிறப்பாக நடைபெற்று பதினொன்றாவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது.

மக்களுடன் முதல்வர் திட்டங்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும், நகர் புறங்களிலும், பேரூராட்சிகளிலும், மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாநகராட்சி பகுதிகளில் திட்டத்தை சிறப்பு செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம்.

இந்தக் கூட்டத்தின் நோக்கம் மக்களுக்கான அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்வு காண்பது. திராவிட மாடலான ஆட்சி இன்றுடன் நான்கு ஆண்டு நிறைவு பெற்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும் என்பதே முதல்வருடைய  உத்தரவு, தூத்துக்குடி மாநகராட்சி தொடர்ந்து பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செய்து கொண்டிருக்கிறது. இதுவரை எந்த குறையும் இல்லாமல் இந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. சுகாதாரம் பற்றிய விளம்பரங்கள் ஆட்டோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த கூட்டத்திற்கு வந்து தான் புகார் அளிக்க வேண்டும் என்று அவசியமில்லை, தற்போது ஆன்லைனில் கூட புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளோம். ஆன்லைன் புகார் அளித்தால் புகார் மீது உடனடி நடவடிக்கை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து குப்பை சம்மந்தமான ஏதேனும் புகார் தெரிவித்தால் உடனடியாக சானிடரி ஒர்க்கர்ஸ் தங்களுடைய வீடுகளுக்கு நேரடியாக வருவார்கள். வந்து தங்களது பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணப்படும். நகர்புற சுகாதாரம் திட்டத்தின் கீழ் மக்களை தேடி மருத்துவம் மூலம் வீட்டுக்கு வீடு தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி தமிழக அரசால் வழங்கக்கூடிய அனைத்து அடிப்படை வசதிகள் முழுமையாக பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்து வருகிறது. அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாத பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு மாநகராட்சி தொடர்ந்து முயற்ச்சிகளையும் செய்து கொண்டு வருகிறது. தற்போது குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை, எதிர்க்கட்சி அல்லது மாற்று அரசியல் கட்சிக்காக இருக்கட்டும், தவறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வது வருகின்றனர்.

முதல்வர் கூறியது போல் தவறான கருத்துக்களை கூறுவதால், எங்களுக்கு அது ஊக்கமே தவிர வேறொன்றுமில்லை, ஊக்கம் கொடுப்பதினால் இதைவிட சிறப்பாக தான் செயல்படுமே தவிர, எந்த சலசலப்புக்கும் அஞ்சப் போவதில்லை, ஏன் சொல்கிறேன் என்றால் சென்ற வாரம் கூட மாநகராட்சி அதிகாரிகள் எங்களது தண்ணீர் பந்தலையை அகற்றி விட்டார்கள் என்று ஒரு சில கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மாநகராட்சி பகுதியில்  எல்லோருக்கும் மக்கள் பணி செய்ய உரிமை உண்டு, மக்கள் பணியை யார் வேண்டுமானாலும் செய்யலாம், சட்டத்திற்கு உட்பட்டு, தற்போது இந்த வடக்கு மண்டல அலுவலகத்திற்கு முன்பு அனுமதி இல்லாமல் ஏதேனும் பந்தல் அமைத்தால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் பந்தலை அகற்றி தக்க நடவடிக்கை எடுக்கும்.

தினமும் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திற்கு 3000 திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு ஆணையர் மற்றும் துணை ஆணையர் இருவருக்கும் அனுமதி வேண்டி மனு அளிக்கப்படும். தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு எந்த பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு தான் வருகிறது. யார் வேண்டுமானாலும் மக்கள் பணி செய்யலாம். மாநகராட்சி சார்பாகவே 10 இடங்களுக்கு மேல் குடிதண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருக்கிறது.

பெயருக்கு மட்டும் விளம்பரங்களை வைத்து சுகாதாரக் கேடான பணிகளை செய்ய கூடாது. என்று தான் மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை வைக்கிறது. எந்த கட்சியாக இருந்தாலும் சுகாதாரம் நிறைந்த குடிநீர் பந்தலை அமைக்க வேண்டும் என்று தான் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறைசொல்ல தற்போது வழியில்லாமல் மாநகராட்சி மீது குறை சொல்லி வருகிறார்கள். எதற்கும் கலங்காமல் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. என்று வடக்கு மண்டலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.