தூத்துக்குடி நகர மையத்தில் உள்ள சங்கர ராமேஸ்வரர் கோவிலின் புனிதத் தெப்பக்குளத்தில் கடந்த இரவு பெரிய அளவில் ஏற்பட்ட நிலச்சரிவு பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நடுமேடையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்தது. பாதிப்பு இருபுறமும் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சூழலில் அதிமுக வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சரான சி.த. செல்லப்பாண்டியன் நேரில் தெப்பக்குளத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“50 ஆண்டுகளுக்கு முன்பு தெப்பக்குளம் மிகவும் சுத்தமாக இருந்தது. பல புனித நிகழ்வுகள் நடைபெறும் இந்த குளம் திமுக ஆட்சியின் அலட்சியத்தால் சீரழிந்துள்ளது. கோரம் பள்ளம் குளத்திலிருந்து நீர் வரத்தக்க பாதையும், குளத்தின் உள்புற நீரூற்றும் இருந்தன. மழைக்காலத்தில் குளத்தில் தேங்கிய நீரை வெளியேற்றியது மிகப்பெரிய தவறு. மேலும், இருந்த கிணறு மூடப்பட்டது – இதுவும் தவறான முடிவு.

தற்போது நடைபெறும் கான்கிரீட் பணிகளும் முறையற்றவை. மிக மோசமாக, தெப்பக்குளத்திற்குள் கழிவு நீர் செல்லும் வகையில் இணைப்புகள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடிக்கே பெருமை சேர்த்த ஒரே பெரிய தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பது நகரத்திற்கே ஒரு சாபக்கேடு. தமிழகமெங்கும் தவறான ஆட்சி நடைபெறுகிறது; அதே நிலை தூத்துக்குடியிலும் தெரிகிறது. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தெப்பத் திருவிழா இதனால் சீரழிகிறது.”

அவர் மேலும், “தெப்பத் திருவிழாவுக்கு முன்பு அனைத்து வசதிகளும், சீரமைப்பு பணிகளும் உடனடியாக தொடங்கி முடிக்கப்பட வேண்டும். இந்த ஆட்சியில் புனிதம் கெட்டுப் போய்விட்டது” என்று கடுமையாகக் குற்றஞ் சாட்டினார்.

ஆய்வின்போது மனோஜ்குமார், மில்லை ஆர்.எல். ராஜா, அகஸ்டின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.