தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாசரேத் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஐஜினஸ் அந்தோணி குமார் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

மனுவில், ஏரல் தாலுகா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனை இல்லாததால் மக்கள் அவசர சிகிச்சை கிடைக்காமல் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க, 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை மற்றும் உள் நோயாளி வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை உடனடியாக அமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. நாசரேத் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 28 ஆயிரம் மக்கள் வசித்து வருவதால் இது அவசியம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

மேலும், பிடானேரி சிப்காட் வளாகத்தில் அரசு சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துள்ள தொழிற்சாலை வளாகத்தில் சில சிறிய தொழில் கூடங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இங்கு புதிய தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

அதேபோல், முன்னர் தமிழக அரசு விரைவு பேருந்து கழகத்தின் கீழ் இயங்கிய குட்டம் – இடையன்குடி – திசையன்விளை – சாத்தான்குளம் – நாசரேத் – திருநெல்வேலி வழியாக சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர் சென்ற பஸ்கள் மற்றும் உடன்குடி – மெஞ்ஞானபுரம் – நாசரேத் – திருநெல்வேலி வழியாக பெங்களூர், சென்னை, கோவை சென்ற பஸ்கள் கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளன. அவை மீண்டும் அதே வழித்தடங்களில் இயக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் தாமஸ், மாணவர் அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், பிரதிநிதி வீரமணி, தொழில் சங்க துணை தலைவர் ராஜ்குமார், வழக்கறிஞர் சரவணன், நகர தொழிற்சங்க தலைவர் சகாயம், நகர தொழில்நுட்ப பிரிவு அந்தோணி ராஜ், ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் ஆபிரகாம், இளைஞர் அணி பிரதாப் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.