அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) 54வது ஆண்டு தொடக்கவிழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அண்ணா உருவம் பொறித்த மூவர்ணக் கொடியை அறிமுகப்படுத்தி எம்.ஜி.ஆர் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியதில் தொடங்கி இன்று வரை அதிமுக தமிழக அரசியலில் ஒரு பெரும் மக்கள் இயக்கமாகத் திகழ்கிறது. மக்களால் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில், முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் கட்சியை வளர்த்து வரலாற்று சாதனைகளை படைத்தார். அவரின் மறைவிற்கு பின் நான்கரை ஆண்டுகள் தமிழக முதலமைச்சராகப் பணியாற்றிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கிய நல்லாட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் நிலைநாட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு அதிமுகவினரின் கடமையாகும்.”

“அந்த அடிப்படையில், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் உத்தரவின்படி, வருகிற அக்டோபர் 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) 54வது ஆண்டு தொடக்கவிழாவை திருநாளாகக் கொண்டாடுகிறோம். இதனை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி டூவிபுரம் மாவட்ட அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்திற்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் இணைந்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி, கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை சிறப்பிக்க வேண்டும். அதே நாளில் திருச்செந்தூரில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியினரும் பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனவும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.