தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்கள் நீண்டநாள் கோரிக்கையாக வைத்திருந்த சலுகை விலை வீட்டு மனை வழங்குதல் குறித்த பிரச்சினை இன்னும் தீர்வு காணப்படாததை கண்டித்து, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டம் நாளை (23.10.2025) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகம் முன்பு நடைபெற உள்ளது.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளர்கள் முன்வைத்து வரும் இந்த கோரிக்கைக்கு இன்னும் அரசின் நேர்மையான பதில் கிடைக்காத நிலையில், பத்திரிகையாளர்களின் உரிமைக்குரல் ஒலிக்கச் செய்யும் விதமாக இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் A.T. சண்முகசுந்தரம், செயலாளர் S. மோகன்ராஜ், பொருளாளர் J. ராஜு, துணைத் தலைவர் A. சிதம்பரம், இணைச் செயலாளர் P. சதீஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில்,

“நமது பத்திரிகையாளர்கள் பல ஆண்டுகளாக அரசு மற்றும் அதிகாரிகளிடம் சலுகை விலை வீட்டு மனைக்காக பலமுறை மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறோம். எனவே தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து பத்திரிகை சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஒன்றுபட்டு கலந்து கொள்ள வேண்டுகிறோம்,” என்று தெரிவித்துள்ளனர்.

பிரஸ் கிளப் சார்பில் சட்ட ஆலோசகர்கள், கௌரவ ஆலோசகர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இணைந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

“ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்!” என்ற முழக்கத்துடன், ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற உள்ளதாக பிரஸ் கிளப் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.