வடகிழக்கு பருவமழை கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வியாபாரிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

முக்கியமாக மாநகராட்சி 40-வது வார்டில் உள்ள பிரெஞ்ச் சாப்பல் ரோடு பகுதியில் நிலைமை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது. இந்த சாலையில் பெரும்பாலான கடைகள், நான்கு பள்ளிகள் மற்றும் ஒரு தேவாலயம் உள்ளன. தொடர்ந்து பெய்த மழையால் மழைநீர் தேங்கி, சாலையில் குப்பை மற்றும் சகதிகள் குவிந்து வழியில்லா நிலையில் உள்ளது.

மழைநீர் வடியிய பின்னரும் சாலையில் சேறு, துர்நாற்றம் மற்றும் கழிவுகள் அப்படியே கிடப்பதால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகளுக்கு சரக்குகள் வாங்க வருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் இதே சாலையை பயன்படுத்த வேண்டிய நிலையில், மழைநீர் தேங்கிய பகுதிகளில் சிலர் வழுக்கி விழும் அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் தெரிவித்ததாவது “மழை பெய்தாலே இந்த சாலையில் நீர் தேங்கி பல நாட்கள் வடியாமல் உள்ளது. கடைகள் முன்பு சேறு, சகதி, துர்நாற்றம் வாடிக்கையாளர்களே வர முடியாத நிலை. மாநகராட்சி உடனடியாக மழைநீர் வடிகால் அமைத்து நிரந்தர தீர்வு செய்ய வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மழைநீர் வடிந்த பின் சாலைகளை சுத்தம் செய்து, நீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.