செங்கல்பட்டு மாவட்ட அளவிலான சிறார் திரைப்பட மன்றப் போட்டிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணையின்படியும், மாவட்ட ஆட்சியர் மற்றும் இணை இயக்குநர்கள் ஆலோசனையின்படியும், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் செங்கல்பட்டு சி.எஸ்.ஐ. அலிசன் காசி மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர், பள்ளித்துணை ஆய்வாளர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் அமைப்புக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். காரணைப்புதுச்சேரி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், மேலாண்மைக் குழுத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அலுவலர்களுக்கும், நடுவர்களாக பணியாற்றியவர்களுக்கும் நினைவுப் பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. முதன்மை கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் அனைவரையும் வரவேற்று ஒருங்கிணைத்து சிறார் திரைப்படப் போட்டிகளை சிறப்பாக நடத்தினார்.

முதன்மை கல்வி அலுவலர் தனது உரையில் பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி விளக்கி, போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாட்டு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என அறிவித்தார். மேலும் மாவட்ட கல்வி அலுவலரும், உதவி திட்ட அலுவலரும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நல் அறிவுரைகளை வழங்கினர்.

சிறார் திரைப்பட மன்றப் போட்டிகளில் நடிப்பு, கதை, வசனம், ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் 6–7, 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. 8 வட்டாரங்களில் இருந்து மொத்தம் 72 மாணவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில், மேலும் 210 மாணவர்கள் துணை நடிப்பில் கலந்து கொண்டு மொத்தம் 300 மாணவர்கள் பங்கேற்றனர்.

போட்டிகளின் நடுவர்களாக இசையமைப்பாளர் டாக்டர் சாம் சுதாகர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் முனைவர் சீதளாதேவி, இயக்குநர் மற்றும் ஓவியக் கவிஞர் வீரமணி ஆகியோர் மற்றும் பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்று நடுநிலையான மதிப்பீடுகளை அளித்தனர்.

போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், மற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டி நாளிலேயே முதன்மை கல்வி அலுவலரால் மாணவர்களுக்கு பயணப்படி, நடுவர்களுக்கான மதிப்பூதியம் ஆகியவையும் வழங்கப்பட்டன. அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான சிறார் திரைப்பட மன்றப் போட்டிகளுக்கு தேர்வாகினர்.

போட்டியில் பங்கேற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், நடுவர்களுக்காக மதிய உணவு வழங்கப்பட்டு விழா சிறப்பாக நிறைவடைந்தது.