தூத்துக்குடி மாநகரின் அடையாளமாகவும், தமிழ்நாட்டில் திருத்தந்தையால் அங்கிகரிக்கப்பட்ட 10 பேராலயங்களுள் ஒன்றாகவும் திகழும் பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்தின் 443 ம் ஆண்டுப் பெருவிழாவானது ஜூலை 26 சனிக்கிழமை முதல் ஆகஸ்ட் 05 செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளது.

ஜூலை 26ம் தேதி தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகை அவர்கள் கொடியேற்றி இவ்விழாவினைத் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இத்தொடக்கக் கொடியேற்ற விழாவில் ஆயர்கள், குருக்கள், இறைமக்களோடு இணைந்து அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

பெருவிழாவின்போது. ஆகஸ்டு மாதம் 3 ம் தேதி ஞாயிறு அன்று காலை தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் குழந்தைகளுக்கான புதநன்மைத் திருப்பலி நடைபெறவுள்ளது. அன்று மாலையில் பேராலய வளாகத்தில் திரளான இறைமக்கள் பங்கேற்கும் திவ்விய நற்கருணைப் பவனியும் நடைபெறவுள்ளது.

இவ்வாண்டுப் பெருவிழாவின் சிறப்பம்சமாக, ஆகஸ்டு மாதம் 4ம் தேதி திங்கள் கிழமை மாலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்படும் திருவிழாவிற்கான சிறப்புத் திருப்பலியை ஐதராபாத் உயர்மறைமாவட்டப் பேராயரும் கர்தினாலுமான மேன்மைமிகு அந்தோனி பூலா ஆண்டகை அவர்கள் தலைமையேற்று நடத்த இருக்கின்றார்கள். தொடர்ந்து அன்று மாலையில் தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் மாலை ஆராதனையும் நடைபெறவுள்ளது.

பெருவிழா கூட்டுத் திருப்பலி ஆகஸ்ட் 5 ம் தேதி செவ்வாய்க்கிழமை மேதகு ஆயர் ஸ்டீபன் ஆண்டகை அவர்களாலும் உபகாரிகளுக்கானத் திருப்பலி மேனாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை அவர்களாலும் சிறப்பிக்கப்படும்.

அன்னையின் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேராலய அதிபர், பங்குத்தந்தை அருள்பணி. ஸ்டார்வின், துணைப் பங்குத்தந்தை அருள்பணி. பிரவீன் ராசு, களப்பணியாளர் சகோ. மிக்கேல் அருள்ராஜ் மற்றும் அடைக்கல அன்னை, அமலவை அருள்சகோதரிகள், சவேரியானா இயேசு சபையினர், லசால் அருள்சகோதரர்கள், பேராலய மேய்ப்புப் பணிக்குழுவினர், பக்த சபையினர் மற்றும் இறைமக்கள் இணைந்து செய்து வருகின்றனர். என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பேட்டியின் போது உதவி பங்குதந்தை அருள்பணி பிரவீன் ராசு, துணை தலைவர் அண்டோ, செயலாளர் எட்வின் பாண்டியன், துணை செயலாளர் பெனாட், பொருளாளர் ஜோ சோரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.