தூத்துக்குடி மாநகரில் பெய்த கனமழையால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதை அடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடிக்கு விரைந்து வந்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வானிலை ஆய்வு மையம் “ஆரஞ்சு அலர்ட்” விடுத்தது. இதன் தாக்கமாக நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. குறிப்பாக பழைய மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பி & டி காலனி, கோக்கூர், கதிர்வேல்நகர், திரேஸ்புரம், இன்னாசியபுரம், இருதயம்மாள்புரம், முத்தையாபுரம், தங்கம்மாள்புரம், தோப்புத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இந்நிலையை அறிந்த அமைச்சர் கீதாஜீவன், சட்டசபை நிகழ்வில் இருந்தபோதும் உடனடியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தூத்துக்குடி நிலவரத்தை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் அவரை உடனடியாக தூத்துக்குடிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்.

அதன்படி அமைச்சர் கீதாஜீவன் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு வந்து, மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். அங்கு மழைநீரை வெளியேற்றுவதற்கான பணிகளை துரிதப்படுத்தும் வகையில் அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது “தூத்துக்குடியில் தொடர்ந்து பெய்த மழையால் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதாக தகவல் கிடைத்தது. முதலமைச்சரின் அனுமதியுடன் உடனடியாக தூத்துக்குடி வந்து நிலைமையை ஆய்வு செய்தேன். அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய நீர் உயர்தர மின் மோட்டார்களின் உதவியுடன் வெளியேற்றப்பட்டது. கடந்த ஆண்டுகளைப் போல இம்முறை நீர் தேக்கம் மிகக் குறைவாக உள்ளது. முத்தையாபுரம், தங்கம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக மோட்டார்களின் மூலம் நீர் வெளியேற்றப் பணி நடைபெற்று வருகிறது,” என தெரிவித்தார்.

பின்னர் அவர் மாநகரத்தின் பிற பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி டீன் சிவகுமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட பலரும் அமைச்சர் உடன் கலந்து கொண்டனர்.