தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் அவர் லேண்ட் நிறுவனத்தின் கீழ் 1,500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வரவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு போனஸ் வழங்க வேண்டும் எனக் கோரி திங்கட்கிழமை தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு, மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கத் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த தகவலை அறிந்த தூத்துக்குடி மேயர் ஜெகன் பொன்யசாமி உடனடியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் நிலைமையை கேட்டறிந்தார். வெயிலில் நீண்ட நேரம் தூய்மை பணியாளர்கள் காத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்ததும், மேயர் ஜெகன் தனது அறையிலிருந்து வெளியே வந்து பணியாளர்களை நேரில் சந்தித்தார்.

அவர்களிடம் பேசிச் சூழ்நிலையை புரிந்துகொண்ட மேயர், உடனடியாக மாநகராட்சி ஒப்பந்ததாரர் அவர் லேண்ட் நிறுவன பிரதிநிதியுடன் தொலைபேசியில் பேசி நடவடிக்கை மேற்கொண்டார். அதன் பின், தூய்மை பணியாளர்களிடம்,

“நீங்கள் எதிர்பார்த்த தீபாவளி போனஸ் ரூ.2,500 வழங்கப்படும். நிறுவனம் ஏதேனும் பிரச்சனை செய்தால், நான் உங்களுடன் இருக்கிறேன். நேரடியாக என்னிடம் முறையிடலாம்,”
என உறுதியளித்தார்.

மேயர் ஜெகனின் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள், உடனடியாக போராட்டத்தை நிறுத்தி மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

தூய்மை பணியாளர்களின் மனதை கவர்ந்து அவர்களுக்காக நேரில் பேசி, 2,500 ரூபாய் தீபாவளி போனஸை வாங்கி கொடுத்த மக்கள் மேயர் ஜெகன் அவர்களின் மனிதநேயச் செயல் தூத்துக்குடி முழுவதும் பாராட்டை பெற்றுள்ளது.