தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் (08.09.2025) முதல் (10.09.2025) ஆகிய மூன்று நாட்கள் "மரியின் கலை விழா" நடைபெற்றது.

துவக்க விழாவில் மதுரை மருத்துவ கல்லூரி, மகளிர் மற்றும் மகப்பேறியல் சிறப்பு மருத்துவர் பூங்கோதை அருள் பிரகாசம் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவியர் இன்றைய சவால்களை எதிர்கொண்டு மீண்டு எழவேண்டும் என்று சிறப்புரையாற்றினார்கள்.

மூன்று நாட்களும் தனி நடனம், குழு நடனம், பாடல், பானை ஓவியம், நிலைக்காட்சி, நாடகம், மலர் அலங்காரம், சிகை அலங்காரம், புதுமை முறையிலான குடை ஓவியம், களிமண் மற்றும் கண்ணாடி துண்டுகளைப் பயன்படுத்தி சுவர் ஓவியம், காய்கறி சிற்பம், நெருப்பில்லா சமையல், விளம்பர மோகம், ரங்கோலி இது போன்ற இன்னும் பல்வேறு போட்டிகளில் அனைத்துத் துறை மாணவியர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

இளைய சமுதாயம் கல்வியில் மட்டுமல்லாது தங்களின் கலைத் திறன்களையும் வெளிப்படுத்த சிறந்ததொரு வாய்ப்பாக இருந்தது. விழாவின் நிறைவு நாளன்று தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜாய்சிலின் ஷர்மிளா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவியரின் திறன்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள்.   

நாற்பதிற்கும் மேற்பட்ட அந்ததந்த துறையில் புலமைபெற்ற நடுவர்கள் மதிப்பீடு செய்த பின் மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த போட்டிகளுக்கான முதல் பரிசுக்கான வெற்றிக் கேடயத்தை ஆங்கிலத் துறை மாணவியரும், இரண்டாம் பரிசுக்கான ஒட்டுமொத்த  வெற்றிக் கேடயத்தை வணிகவியல் துறை மாணவியரும்  பெற்றுக்கொண்டு குதூகலித்தனர். கல்லூரிப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.