தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில், ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு அக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை சிறப்பு மஹா யாக வழிபாடுகள் மிகுந்த பக்தி, ஆன்மீக உணர்வுடன் நடைபெற்றது.

“சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற இவ்வழிபாட்டில், உலகில் அன்பும் அமைதியும் நிலவ வேண்டும் என்பதோடு, விவசாயம் மற்றும் அனைத்து தொழில்களும் செழித்திட வேண்டும் என்றும், பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகிட வேண்டும் என்றும் ஸ்ரீ மஹா பிரத்தியங்கிரா தேவியிடம் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.

மஹா பிரத்தியங்கிராதேவி மற்றும் மஹா கால பைரவருக்கு பால், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 64 வகையான அபிஷேகங்கள் மிகுந்த ஆராதனையுடன் நடைபெற்றது. தொடர்ந்து ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களுக்கு தீபாராதனை செய்யப்பட்டது.

மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். வழிபாட்டின் நிறைவாக பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவின் அனைத்து ஏற்பாடுகளும் “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக்குழுவினரால் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.