தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு மானிய விலையில் வீட்டு மனை வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி, தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பிரஸ் கிளப் முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார்.

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் மூத்த உறுப்பினரும் சங்கத்தின் கௌரவ ஆலோசகருமான அருண், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் சக்தி முருகன், தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணிச் செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் செங்குட்டுவன், பாஜக பிரமுகர் ராஜவேல், வக்கீல்கள் சேகர், மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு தமிழக அரசின் சலுகை விலை வீட்டு மனை நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழிகளில் அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பத்திரிகையாளர்கள் கருப்பு உடை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டு, “வீட்டு மனை வழங்கு”, “பத்திரிகையாளர்களுக்கு நீதி செய்யுங்கள்”, “30 ஆண்டுகாலக் கோரிக்கை நிறைவேற்றுங்கள்” எனக் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணிச் செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் அவர்கள்,

“தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் அதிமுக சார்பில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என்று தெரிவித்தார்.

அவருடன் பங்கேற்ற பிற தலைவர்களும், “இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் மானிய விலையில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால், மாவட்டம் முழுவதும் பத்திரிகையாளர்களை திரட்டி மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என்று வலியுறுத்தினர்.

“அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிகையாளர்களை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது வேதனைக்குறியது. பத்திரிகையாளர்களின் வாழ்வாதார பாதுகாப்பிற்கும் நிலையான இட வசதிக்கும் உடனடி தீர்வு வழங்க வேண்டும்,” என்றும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பிரஸ் கிளப் கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் லெட்சுமணன், மாரிராஜா, கண்ணன், முத்துராமன், இருதயராஜ், ராஜன், குமார், பிரஸ் கிளப் உறுப்பினர்கள் ரவி, மாரிமுத்து, முரளிகணேஷ், பாலகுமார், அகமதுஜான், அறிவழகன், நீதிராஜன், நடராஜன், கார்த்திகேயன், ஜெயராம், சூர்யா, ராமச்சந்திரன், செய்யது அலி சித்திக், கருப்பசாமி, சந்தனரமேஷ், அருள்ராஜ், மாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் பிற சங்கங்களைச் சேர்ந்த குமாரவேல், அண்ணாதுரை, முத்துமாரியப்பன், அல்போன்ஸ், சதீஸ்குமார், ஞானதிரவியம், ராஜேந்திரபூபதி, ரோஜா அருணன், செல்வின், கார்த்திக், சத்யா, சுடலைமணி, கனகராஜ், விஜயகாந்த், பாலசுப்பிரமணியன், மணிராஜ், இமானுவேல் குணசிங் உள்ளிட்ட ஏராளமான பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஊடகத் துறை பணியாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முழுவதும் ஒழுங்காகவும், அமைதியாகவும் நடைபெற்றது. பத்திரிகையாளர்களின் கோரிக்கையை விரைந்து பரிசீலிக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியில், தூத்துக்குடி பிரஸ் கிளப் பொருளாளர் ராஜு நன்றியுரை ஆற்றினார்.