தூத்துக்குடி மாவட்டம், அக்டோபர் 21, 2025 — "காவலர் வீர வணக்க நாள்" முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப தலைமையில் மரியாதை நிகழ்வு நடைபெற்றது.

1959ம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி லடாக் பகுதியில் உள்ள “ஹாட் ஸ்பிரிங்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் வீரமரணம் அடைந்தனர். அந்த நிகழ்வை நினைவுகூர்ந்து, பணியில் உயிர் நீத்த காவல்துறையினருக்கு நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி "காவலர் வீர வணக்க நாள்" ஆகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்வில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் சுதீர், குருவெங்கட்ராஜ், அசோகன், ஜமால், மகேஷ்குமார், அருள், ஆவுடையப்பன், நிரேஷ், ஜெகநாதன், ராஜு, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் தங்கள் சீருடைகளில் கருப்பு ரிப்பன் அணிந்து மலர் வளையம் வைத்து வீர காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கடந்த ஆண்டில் பணியில் உயிர்நீத்த காவல்துறையினரின் பெயர்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார். பின்னர் 54 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு நிகழ்ச்சி நிறைவடைந்தது.