தூத்துக்குடி உட்பட மாநிலம் முழுவதும் இன்று (செப்டம்பர் 17) சமூக மாற்று சின்னமாக விளங்கிய "வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஈ.வே. ராமசாமி" அவர்களின் பிறந்த தினம் மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி சமூக நீதி நாள் ஆகக் கடைப்பிடித்து, சமத்துவம், பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகளை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றன.

சமூகத்தில் நிலவும் ஜாதி, மத, பாலின ஒடுக்குமுறைகளை எதிர்த்து, மனிதர் மனிதராக வாழ வேண்டும் என்ற சிந்தனையை மக்களிடையே விதைத்தவர் தந்தை பெரியார். அவரின் கொள்கைகள் இன்று வரை வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல், சமூக, கல்வி, தொழிற்சங்க அமைப்புகள் உறுதிமொழி எடுத்து, சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம் நிலைநாட்டப் பாடுபடுவோம் என்ற உறுதியுடன் நினைவு கூர்ந்தனர்.