வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து மழைநீர் தேங்கியிருந்தது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெரும்பாலான இடங்களில் மழைநீரை அகற்றியது. பல பகுதிகளில் நீர் தானாகவே கடலுக்கு சென்றது. ஆனால் மூன்றாம் மைல் பகுதியில் மழைநீர் செல்லாமல் தேங்கியிருந்தது.

இதையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் அதிகாரிகளுடன் இணைந்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, பாலிடெக்னிக் எதிர்புறம் உள்ள ஒரு பிரபல ஹோட்டல், இறைச்சி கழிவுகள் மற்றும் மனித கழிவுகளை செப்டிக் டேங்க் அமைக்காமல் நேரடியாக கழிவுநீர் கால்வாயில் விட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக சுமார் 30 அடி நீளத்திற்கு கழிவுநீர் கான் அடைப்பு ஏற்பட்டது.

நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின்படி, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிமெண்ட் பிளேட்டுகளை அகற்றினர். அதில் மனித மற்றும் இறைச்சி கழிவுகள் பாறை போல உறைந்து தேங்கி இருந்தது தெரியவந்தது. சுமார் ஒரு லாரி அளவுக்கு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் அந்த ஹோட்டலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது. மேலும், இதுபோன்ற சட்டவிரோத செயலில் மீண்டும் ஈடுபட்டால், ஹோட்டல் நிரந்தரமாக மூடப்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் ஆகியவை மனித கழிவு, இறைச்சி கழிவு போன்றவற்றை நேரடியாக கழிவுநீர் கால்வாய்களில் விடக்கூடாது. இதனை மீறும் நிறுவனங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.

தற்போது மாநகராட்சி நிர்வாகம் இத்தகைய மீறல்களை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்று பாராட்டுகின்றனர்.