தூத்துக்குடி மாநகராட்சி, வீகென் டிரஸ்ட், செயிண்ட் மேரீஸ் கல்லூரி மற்றும் வேல்ட் கவுன்சில் பார் உமன் ரைட்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து, இனிகோ நகர் கடற்கரையில் மாபெரும் மாஸ் கிளினிங் துப்புரவு பணி நடைபெற்றது.

கல்லூரி மாணவிகள், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா அதிகாலையிலேயே நேரடியாக பங்கேற்று கழிவு அகற்றும் பணியில் களமிறங்கினர்.

கடற்கரை பகுதியில் தேங்கி கிடந்த மீன் வலைகள், பிளாஸ்டிக் கப்புகள், செருப்புகள், கயிறுகள், மது பாட்டில்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை மாணவிகள் தங்களது கைகளால் அகற்றினர். அப்பகுதியில் வளர்ந்திருந்த கருவேல செடிகள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டன. மேலும், 5 கி.மீ தூரம் புதிய நடைபாதை அமைக்கும் பணிகளையும், மின்விளக்குகள் நிறுவப்பட உள்ள இடங்களையும் மேயர் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், பனை விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு, “இயற்கையை பேணுவதே நம்முடைய உண்மையான முன்னேற்றம்” என்ற செய்தி பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

மேயர் உரை:

“தூத்துக்குடி மாநகராட்சியில் தினசரி 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் 120 டன் மக்கும்-மக்காத குப்பைகளை சேகரித்து சுத்தம் செய்து வருகின்றோம். ஆனால் மாசு இல்லாத மாநகரம் உருவாக, மக்கள் ஒத்துழைப்பு அவசியம். கடலுக்குள் கழிவு சேரும் போது மீன்களின் இனப்பெருக்கத்திற்கே ஆபத்து. கடல் நமது தாய் என்பதால், பொதுமக்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். மக்கள் பணி செய்வதே எங்களின் கடமை” என்று மேயர் ஜெகன் பெரியசாமி வலியுறுத்தினார்.

துப்புரவு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மாநகராட்சி சார்பில் முககவசம், கையுறை, காலை உணவு வழங்கப்பட்டது.

கலந்து கொண்டோர்:

வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர் ரெக்ஸ்லின், சுகாதார ஆய்வாளர் நெடுமாறன், வட்டச்செயலாளர் ரவீந்திரன், வீகென் டிரஸ்ட் தலைவர் ஏஞ்சலின், செயலாளர் முத்துராஜ், மேயரின் உதவியாளர் ரமேஷ், ஆணையரின் உதவியாளர் துரைமணி, அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உற்சாகமாக பங்கேற்றனர்.