தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணியினர் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இது தொடர்பாக முன்னாள் லே செயலர் எஸ்.டி.கே. ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “தூத்துக்குடியில் உள்ள ஆறு சபை மன்றங்களில் எங்கள் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர். ஒவ்வொரு கவுன்சிலுக்கும் நான்கு பேர் தேர்வு செய்யப்படுவர். நாங்கள் ஆறு பேருடன் போட்டியிட்ட நிலையில் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் மொத்தம் 26 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு எங்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தல் முழுமையாக முறையான நடைமுறைகளின் கீழ் நடைபெற்றுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தேர்தலை நேர்மையாக நடத்தினார். அவர் யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை. எதிரணியினர் கட்டிடங்கள் கட்டுவதில் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பான முழுமையான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிரணியினர் தங்களுக்கு 70 சதவீதம் ஆதரவு இருப்பதாக பொய்பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் தேர்தலில் கூட நிற்பதற்கு அவர்களிடம் போதிய ஆட்கள் இல்லை. அப்படியிருக்கையில் அவர்கள் எப்படி வெற்றி பெற முடியும். நாங்கள் முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம்.

வருகின்ற 30ஆம் தேதி லே செயலர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் எங்கள் அணியினர் முறையாக வெற்றி பெற்று தேர்வு செய்யப்படுவார்கள்” என அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டியில் கூறியதாவது: “எஸ்.டி.கே. ராஜன் அணி வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். எஸ்.டி.கே. ராஜன் அவர்கள் செய்த தொண்டு பணியின் பயனாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. எதிரணியினர் 70 சதவீதம் ஆதரவு இருப்பதாக கூறி வந்தனர். ஆனால் அவர்கள் செய்த ஊழல்களாலேயே தோல்வியடைந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக எதிரணியினர் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு வந்தனர்” என்றார்.

இந்த பேட்டியின் போது ஜெபசந்திரன், மோகன், ஹென்றி ஞானராஜ், தேவராஜன், ஜான்சன், மாமல்லன், சுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.