தூத்துக்குடி நகரத்தின் வளர்ச்சிக்கு தன்னுடைய நிலங்களை தாராளமாக வழங்கி வரலாற்றில் தங்க எழுத்துக்களில் பெயர் பதிந்தவர் ஜே. எல். பி. ரோச் விக்டோரியா. நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வ.உ.சி சந்தை, புதிய குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல பொதுநல பணிகளுக்காக தன்னுடைய சொந்த நிலத்தை தானமாக அளித்த இவர், தூத்துக்குடி மாநகராட்சியில் ஐந்துமுறை சேர்மனாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், மேலவை பிரதிநிதியாகவும், தமிழக உணவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய பெருமை பெற்றவர்.

1938ம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி வ.உ.சி. சந்தையைத் திறந்து வைத்த ரோச் விக்டோரியாவின் நினைவாக, சந்தை நுழைவு வாயிலில் கல்வெட்டு ஒன்றை மாநகராட்சி சார்பில் அமைத்திருந்தது. பின்னர் சாலை உயர்த்தும் பணிகளின் காரணமாக அந்த கல்வெட்டு தற்போது தரையில் புதைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்த நிலையில், கல்வெட்டை மீண்டும் நுழைவு வாயிலில் உயர்த்தி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நெய்தல் அண்டோ அவர்கள் மாநகராட்சி மேயர் ஜெகனை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அதையடுத்து, கல்வெட்டு அமைந்துள்ள இடம் குறித்து முழுமையான தகவல்களை கேட்டறிந்த மேயர் ஜெகன், உடனடியாக கல்வெட்டை உயர்த்தி சரியான இடத்தில் நிறுவுமாறு மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், சின்ன கோவில் வளாகம் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பகுதியில் நான்கு பள்ளிகள் செயல்படுவதால், மாணவர்கள் சாலையில் செல்லும் போது வாகனங்கள் வேகமாக வருவது பாதுகாப்பு பிரச்சனையாக இருப்பதை கவனத்தில் கொண்டு, அதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் ஆசிரியர் சேவியர்புர்னோ, சிபின்ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.