தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் வேகமெடுத்து வருகின்றன. இந்த பணிகளை ஒரே நாளில் நான்கு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேயர் ஜெகன் பெரியசாமி.

ஓம் சாந்தி நகரில் மழைநீர் வெளியேற்ற மின் மோட்டார் அறை பணிகள், ரஹ்மத் நகர் – ராம் நகர் பகுதிகளில் நூலக கட்டுமானப் பணிகள், குறிஞ்சி நகர் வடிகால் தூர்வாரும் பணிகள், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் செயின்ட் மேரிஸ் பெண்கள் கல்லூரி முன்பாக நடைபெறும் சாலை தூர்வாரும் பணிகள் ஆகியவற்றை அவர் நேரில் ஆய்வு செய்தார்.

அவருடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் பவானி, வட்ட கழக பிரதிநிதி மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மழைநீர் தேக்கம் இல்லாமல் பொதுமக்கள் சிரமமின்றி வாழும் வகையில் பணிகளை விரைவாகவும் தரமாகவும் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் உத்தரவு வழங்கினார்.