வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதற்கு பிறகு, தூத்துக்குடி மாநகரில் நேற்று இரவு மழை பெய்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் மீண்டும் கனமழை பெய்தது. இதையடுத்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக நகரின் மழைநீர் மற்றும் கழிவுநீர் கான்களின் நிலையை ஆய்வு செய்தார்.

முதலில் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் புதியதாக கட்டப்படுகின்ற கழிவுநீர் கானை பார்வையிட்டு, அருகிலுள்ள மழைநீர் செல்லும் வழிகளை ஆய்வு செய்தார். பின்னர் பழைய மாநகராட்சி அலுவலகம் பின்பு உள்ள கழிவுநீர் கான்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் 2 கிலோமீட்டர் தூரம் வரை கனமழையில் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில், கழிவுநீர் கான்களில் தண்ணீர் சரியாக செல்கிறதா, மணல் அல்லது தடைகள் உள்ளதா என கம்பு வைத்து கானுக்குள் குனிந்து பார்வையிட்டார். மணல் மற்றும் தடைகள் காணப்பட்ட பகுதிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

மேலும், பிள்ளையார் கோவில் முன்பு மற்றும் இந்திரா காந்தி சிலை அருகே உள்ள கழிவுநீர் கான்களில் நீர் ஓட்டம் குறைவாக இருப்பதை கவனித்து, தடைகளை உடனடியாக அகற்றும் பணிகளை தொடங்க உத்தரவிட்டார். சந்தை ரோடு பகுதியில் நடைபெறும் புதிய கழிவுநீர் கான்கள் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், திமுக வட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், போல் பேட்டை பகுதி திமுக பிரமுகர் பிரபாகர் உள்ளிட்ட பலர் மேயருடன் உடன் இருந்தனர்.

பொதுமக்கள் மேயர் கம்பு வைத்து நேரடியாக கானுக்குள் குனிந்து ஆய்வு செய்வதை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.