தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளான முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் உள்ளிட்ட இடங்களில் பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய உப்பளத் தொழிலை அழித்து கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இணைந்து முத்தையாபுரம் பஜாரில் இரண்டாவது முறையாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அதிமுக வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்.

அவர் தனது உரையில் தெரிவித்ததாவது: “புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் 2013 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்கும் திட்டத்தை உப்பளத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நிறுத்தி வைத்தார். மேலும் அந்தத் திட்டத்தை மற்றொரு இடத்திற்குக் மாற்ற நடவடிக்கை எடுத்தார். ஆனால், தற்போதைய திமுக அரசு சிலரது சுயலாபத்திற்காக இதே இடத்தில் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துகிறது. இதனால் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது. இதனை அதிமுக கடுமையாகக் கண்டிக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு சென்று தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து, அதிமுக சார்பில் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்,” என்று அவர் எச்சரித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உப்பளத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், உற்பத்தியாளர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.