தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று மாலை உற்சாகமாக நடைபெற்றது.

“தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என்ற முழக்கத்தோடு நடைபெற்ற இக்கூட்டத்தில், ஓரணியில் தமிழ்நாடு குடும்பத்தில் இணைந்துள்ள 1 கோடி குடும்ப உறுப்பினர்களின் சார்பில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகவும், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் திருத்தங்களுக்கு எதிராகவும், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் திட்டங்களுக்கு எதிராகவும், தமிழ் மொழி, பண்பாடு, பெருமைக்கு எதிரான பாகுபாட்டுகளுக்கு எதிராகவும் போராடுவோம் என உறுதி ஏற்றனர். மேலும் பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காகப் பாடுபடுவோம் என்றும் உறுதிமொழி ஏற்றனர்.

கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தலைமை தாங்கினார்.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை கழக பேச்சாளர் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி மற்றும் தலைமை கழக பேச்சாளர் சரத் பாலா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என்ற தலைப்பில் ஆண்டாள் பிரியதர்ஷினி சிறப்புரை நிகழ்த்தியதோடு, தற்போது சரவெடி சரத் பாலா உரையாற்றினார்.

இந்நிகழ்வில் திரளான திமுக கழக செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்ட பாக முகவர்களை அமைச்சர் கீதா ஜீவன் கௌரவித்தார்.

தற்போது மேயர் ஜெகன் பெரியசாமி உரையாற்றியதோடு, தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உரையாற்றி வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஒருமனதாக “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதிமொழி எடுத்தனர்.