தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கருதி உடனடியாக வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக மருத்துவ அணி செயலாளரும், கருங்குளம் முன்னாள் யூனியன் தலைவருமான டாக்டர் எஸ்.எம்.ஏ. கோசல்ராம் ராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:
“தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக புதுக்கோட்டை திகழ்கிறது. இப்பகுதியில் பல தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. புதுக்கோட்டையில் அமைந்துள்ள புதிய மேம்பாலம் அருகே முன்பு வேகத்தடைகள் இருந்தன.

பின்னர் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கப்பட்டபோது, நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் விமான சர்வீஸை துவக்கி வைத்தபோது, அப்பகுதியில் உள்ள அனைத்து வேகத்தடைகளும் அகற்றப்பட்டன. ஆனால் அதன் பின்னர் மீண்டும் அவை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று, பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பொதுமக்களின் உயிர் பாதுகாப்பையும், சாலை பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக புதுக்கோட்டை புதிய மேம்பாலம் அருகே வேகத்தடைகள் அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்,” என கோசல்ராம் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

அறிக்கையின் இறுதியில் அவர், “இது அரசின் கவனத்திற்கு உடனடியாக வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.