தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள காமராஜர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அரசு மருத்துவ சேவைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என வலியுறுத்தினார்.

முகாமின் ஒரு பகுதியாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பேட்டகங்கள் வழங்கப்பட்டன. ஆயூஷ் துறை சார்பில் மூலிகை செடிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் எம்எல்ஏ சண்முகையா சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் சிறப்பம்சமாக, எம்எல்ஏ பொதுமக்களோடு மக்களாக அமர்ந்து உணவு வாங்கி அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார். இதனை கண்ட பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து, எம்எல்ஏ மக்களுடன் அமர்ந்து உணவு அருந்துவதை பார்த்து உற்சாகத்துடன் உணவு பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்வு அங்கு கூடிய அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விக்னேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் TTC. ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பிலோமின்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மகளிரணி ஆரோக்கியமேரி, கிளை செயலாளர்கள் முருகன், ஏசுராஜ், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவ சேவைகளுடன் மனிதநேயமும் இணைந்த இந்த “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.